16 மே 2012

தமிழர் பண்பாடு கூறும் திருக்குறள்

                               விருந்தோம்பல் 

81.இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
     வேளாண்மை செய்தற் பொருட்டு.
                      இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே. 

82.விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
      மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
                    விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

83.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
      பருவந்து பாழ்படுதல் இன்று.
                      விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

84.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
      நல்விருந் தோம்புவான் இல்.
                  மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

85.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
      மிச்சில் மிசைவான் புலம்.
                      விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

86.செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
      நல்விருந்து வானத் தவர்க்கு.
                       வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

87.இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
     துணைத்துணை வேள்விப் பயன்.
                   விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

88.பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
     வேள்வி தலைப்படா தார்.
                                    செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.  

89.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
     மடமை மடவார்கண் உண்டு.
                        விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

90.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
      நோக்கக் குழையும் விருந்து.
                          அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
                                                                                                                 -திருவள்ளுவர் . 
             
                              >>>>>>>>>>>>>>திராவிடன் <<<<<<<<<<<<<<<<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக